பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு
UPDATED : டிச 06, 2024 10:30 PM
ADDED : டிச 06, 2024 07:05 PM

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சேதத்தை சீரமைத்ததற்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்து உள்ளது.
சமீபத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடந்ந்த பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.
ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னையில் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு நாளை பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். புதுச்சேரிக்கும் செல்ல உள்ளனர்.
இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை 28 மாநிலங்களுக்கு 21,718 கோடி விடுவித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.