ADDED : டிச 02, 2024 06:47 AM

சென்னை: வானிலை ஆய்வு மையம் நேற்று ெவளியிட்ட அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு 10:30 முதல் 11:30 மணிக்குள் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 70 முதல், 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசியது.
நேற்று காலை நிலவரப்படி, புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ., கடலுாரில் இருந்து 40 கி.மீ., சென்னையில் இருந்து 120 கி.மீ., தொலைவில் புயல் நிலை கொண்டு இருந்தது. பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
இது மேலும் படிப்படியாக வலுவிழந்து, மேற்கு நோக்கி மெதுவாக நகரக் கூடும். இதனால், கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை படிப்படியாக குறையும். இருப்பினும், தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று இடி, மின்ன லுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை
திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக் கல், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.