வங்கக்கடலில் 27ல் உருவாகிறது 'மோந்தா' புயல்; வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் 27ல் உருவாகிறது 'மோந்தா' புயல்; வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : அக் 25, 2025 04:55 AM

சென்னை : 'வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 27ம் தேதி புயலாக வலுவடையும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில், 12 செ.மீ., மழையும், ஊத்து பகுதியில், 11 செ.மீ., மழையும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில், 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வரும் 27ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும்.
இது தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், 27ம் தேதி, புயலாக வலுவடையும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யலாம்.
வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28ம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

