பேரூர் பிறவாப்புளி மரம் மீது மோதிய சிலிண்டர் லாரி: கிளை முறிந்ததால் பரபரப்பு
பேரூர் பிறவாப்புளி மரம் மீது மோதிய சிலிண்டர் லாரி: கிளை முறிந்ததால் பரபரப்பு
ADDED : நவ 25, 2024 04:27 PM

கோவை: பேரூர் கோவிலின் பெருமைகளில் ஒன்றான பிறவாப்புளி மரம் மீது சிலிண்டர் லாரி மோதியதால் அதன் கிளை முறிந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
கோவை மாவட்டம் பேரூரில் பட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் '' மேலச்சிதம்பரம் ' என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தல விருட்சமாக புளியமரம், பனைமரம் உள்ளது. பேரூர் பட்டீஸ்வரரை சரண் அடைந்தோருக்கு பிறப்பு, இறப்பு இல்லை என்பதற்கு சான்றாக கோயில் முன்பு பிறவாப்புளி என்ற புளியமரம் உள்ளது. இந்த மரத்தில் இருக்கும் விதைகள் எங்கு போட்டாலும் மீண்டும் மரமாக முளைப்பது இல்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று கோயில் முன் உள்ள சிறுவாணி மெயின் ரோட்டில் சமையல் காஸ் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் மரத்தின் கிளை முறிந்தது. மரத்தின் கிளையை வெட்டிய பிறகு தான் லாரியை அகற்ற முடிந்தது.
இதைக்கண்ட பக்தர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அந்த 2020ம் ஆண்டும் இதேபோன்று ஒரு வாகனம் பிறவாப்புளி மரத்தின் மீது மோதியதாக பக்தர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.