தினமும் 'மன்னிப்பு' கேட்கும் பதிவுத்துறை இணையதளம்
தினமும் 'மன்னிப்பு' கேட்கும் பதிவுத்துறை இணையதளம்
ADDED : மார் 20, 2026 12:26 AM

சென்னை: 'சர்வர்' பிரச்னை சரியாகாததால், பதிவுத்துறை இணையதளத்தில், தினமும் 'மன்னிப்பு' கேட்கும் நிலை உள்ளது.
சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவை எளிமைப்படுத்த, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள், பதிவுத் துறையில் உருவாக்கப்பட்டது.
கடந்த ஜன., 22ல், இந்த மென்பொருளை பயன்படுத்தி, பதிவுத்துறை இணையதளம் செயல்படத் துவங்கியது. அதில், முதல்கட்டமாக, 18 புதிய வசதிகள் அறிமுகமாகின.
சொத்து விற்பனை பத்திரங்களை, சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யவும், இதில் வசதி செய்யப்பட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களாகியும், இந்த வசதிகளை பொது மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது:
பதிவுத் துறையில் பணிகளை மேம்படுத்த, இணையதளத்தில் புதிய வசதிகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்வமாக சென்றால், பதிவுத்துறை இணையதளத்தில் சாதாரண விபரங்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக வரும் ஒரு நபர், வில்லங்க விபரங்கள் பார்க்க சென்றால், முதல் படிநிலையில் விபரங்களை உள்ளீடு செய்தாலும், அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை.
'மன்னிக்கவும் இந்த அமர்வு காலாவதியாகி விட்டது' என, திரையில் வருகிறது. எந்த தலைப்புக் குள் சென்றாலும், 'மன்னிக் கவும்' வாசகம் தான் வருகிறது. சர்வர் பிரச்னையே இதற்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், ஆவண எழுத்தர்கள், இரவு, 11:00 மணி முதல், 12:30 மணி வரையே இணையதளத்தை பயன்படுத்த முடிகிறது என்று கூறுகின்றனர்.
பொது மக்களால் அந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதை, அதிகாரிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்; விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்படும்' என்றனர்.

