ராஜபாளையம் ஊருணியில் செத்து மிதந்த ஆமைகள்: சுகாதாரத்துறையினர் விசாரணை
ராஜபாளையம் ஊருணியில் செத்து மிதந்த ஆமைகள்: சுகாதாரத்துறையினர் விசாரணை
ADDED : ஜன 08, 2024 05:27 AM

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பச்சமடம் ஊருணியில் 25க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்தது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி பச்சமடம் குடியிருப்பு பகுதியில் ஊருணி உள்ளது. இதில் மூன்று நாட்களுக்குள் 25க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி குப்பை, கழிவுகள் கலக்காததாக உள்ளது.
இதனால் மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமைகள், நீர் பறவைகள் என இயற்கையான சூழல் நிலவியது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து நடைப்பயிற்சி இடமாக மாற்ற ரூ.75 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கின.
பெரும்பாலான பணிகள் முடிந்து தற்போது வரை பாதுகாப்பு வேலி அமைக்காததால் திறந்தவெளி பார், சூதாடும் இடமாக மாறி வந்தது. அத்துடன் மீன் பிடிப்பதற்காக இரவு சிலர் விரித்திருந்த வலையில் சிக்கி ஆமைகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகராட்சி சுகாதாரத் துறையினர் உயிரிழந்த ஆமைகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் நாகராஜ் கூறுகையில், ''ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இரு நாட்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கப்படும்,'' என்றார்.