பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன் கையாளுங்கள்: சத்குரு வலியுறுத்தல்
பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன் கையாளுங்கள்: சத்குரு வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 05:49 AM

தொண்டாமுத்துார்: 'பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன், உறுதியான தீர்மானத்துடன் கையாள வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு:
பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல; ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியை பரப்புவதும், சமூகத்தை பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டம் இன்மையை உருவாக்குவதுமே நோக்கமாகும்.
நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன், உறுதியான, நீண்ட கால தீர்மானத்துடன் கையாள வேண்டும். கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என, அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.
மதம், ஜாதி அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால், ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்பு படைகளுக்கு, அவர்களின் கடமையை செய்ய, அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.

