ADDED : நவ 15, 2025 01:17 AM
சென்னை: துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
டி.ஜி.பி., அலுவலகத்தின் இ - மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் வீடுகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. போலீசாரும், மிரட்டல் விடுக்கப்பட்டோரின் வீடுகளில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன், சோதனை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, தமிழர் விடுதலை அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், துணை முதல்வர் உதயநிதி, அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இருவரையும் கொலை செய்ய, 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு இருப்பதாக, இ - மெயிலில் தெரிவித்துள்ளனர். இந்த மிரட்டல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

