நீரிழிவு நோய் தமிழகத்தில் அதிகம் ஆனாலும் உயிரிழப்பு குறைப்பு: மா.சு.,
நீரிழிவு நோய் தமிழகத்தில் அதிகம் ஆனாலும் உயிரிழப்பு குறைப்பு: மா.சு.,
ADDED : நவ 15, 2025 01:18 AM

சென்னை: ''தேசிய அளவை விட தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும், உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில், உலக நீரிழிவு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 'டைப் - 1 டயாபடிக்ஸ்' என்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 5,064 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை, தஞ்சாவூர், கோவை உட்பட ஏழு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான 'டைப் - 1, டைப் - 2' பிரத்யேக சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இது, திருவாரூர், நாகைக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்கான இன்சுலின் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தேசிய அளவில் நீரிழிவு நோயாளிகள் 12 சதவீதமாக உள்ளனர்; தமிழகத்தில் 13 சதவீதமாக உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தாலும், உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளன.
தற்போது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், ஆண்டுக்கு 17,000 என்ற அளவில் உள்ளன. இவற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'பாதம் காப்போம்' திட்டம் துவக்கப்பட்ட பின், 45,349 பேருக்கு பாத பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், 33,185 பேருக்கு, புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 26,448 பேருக்கு அறுவை சிகிச்சை, 3,169 பேருக்கு உறுப்பு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

