டி.இ.டி., தேர்வு: தமிழக அரசு இரட்டை வேடம்; சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் கொந்தளிப்பு
டி.இ.டி., தேர்வு: தமிழக அரசு இரட்டை வேடம்; சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் கொந்தளிப்பு
ADDED : ஏப் 07, 2025 04:53 AM

மதுரை: 'ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நிலைப்பாட்டில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது' என சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 23.8.2010 முதல் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு டி.இ.டி., கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் உதவிபெறும் மைனாரிட்டி பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி., வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதில் மைனாரிட்டி பள்ளிகளுக்கு தேவையில்லை என வகைப்படுத்தப்பட்டது.
பதவி உயர்வுக்கு டி.இ.டி., கட்டாயமாக்கப்பட்டதால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் உச்சநீதிமன்றத்திலும் சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் 'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு டி.இ.டி., வேண்டாம்; பணி நியமனங்களுக்கு மட்டும் பின்பற்றப்படும்' என மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்ந்து நடந்ததால் தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் டி.இ.டி., தகுதி தேர்வு பொருந்தும் என உத்தரவிட்டது. இதனால் இதுவரை டி.இ.டி., விலக்கு பெற்றிருந்த சிறுபான்மையினர் பள்ளி நியமனங்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தொடரும் குழப்பங்கள்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது:
இவ்விஷயத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, உயர்நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்ற பின், தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
ஆனால் மேல்முறையீடு வாபஸ் பெற்றதற்கு பின்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இதனால் தமிழக அரசின் மேல்முறையீட்டிற்கு முந்தைய நிலையில் என்ன உத்தரவு பின்பற்றப்பட்டதோ அதையேதான் கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்றினர். இதே நிலையில்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் அதிகாரிகள் பின்பற்றினர்.
மேல்முறையீட்டிற்கு பின் உள்ள அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க தவறிவிட்டனர். இதையும் தாண்டி டி.இ.டி., விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவுகளை எடுப்பதில்லை. இதன் பின்னணியில் தவறான தகவல் அளிக்கும் அதிகாரிகள் உள்ளனர் என்றாலும் குழப்பத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். அரசின் இந்த இரட்டை வேடத்தால் சிறுபான்மையினர் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

