ADDED : ஜூன் 29, 2025 01:44 AM

தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலும் ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து, முடிவுகள் வெளியான பிறகும், மாநிலத் தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியிடாததற்கு, கோஷ்டி தலைவர்கள்தான் காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையிலான நிர்வாகத்தை, கூண்டோடு கலைத்த பின், மாநிலத் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலர் பதவிகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் 14 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், 85,800 ஓட்டுகள் பெற்று, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலர் சூர்யபிரகாஷ் முதலிடம் பிடித்தார்.
இவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளர். இரண்டாவது இடத்தை 63,000 ஓட்டுகளை பெற்ற அருண் பிரசாத் என்பவர் பிடித்தார். மூன்றாவது இடத்தை பிடித்த தினேஷ், 43,000 ஓட்டுகள் பெற்றார்.
முதலிடம் பிடித்தவர் மாநிலத் தலைவராகவும், அடுத்த வந்த இருவர், துணைத் தலைவர்களாகவும் அறிவிக்கப்பட வேண்டும். கடந்த 13ம் தேதி, புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்காக டில்லியில் நேர்காணல் நடந்தது.
ஆனால், புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பை, கட்சி தலைமை வெளியிடவில்லை. இதற்கு கோஷ்டி தலைவர்கள் தான் காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சூர்ய பிரகாஷ் அதிக ஓட்டுகள் பெற்றதால், அவரை தலைவராக அறிவிக்க வேண்டும். ஆனால், மூன்றாவது இடம் பிடித்த தினேஷ், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் மகேந்திரனின் உறவினர் என்பதால், அவருக்கு மாநிலத் தலைவர் பதவியை பெற, எம்.பி., ஒருவர் முயற்சித்து வருகிறார்.
அவர் தான், ராகுலின் வலதுகரமாக திகழும் பைஜு என்பவரின் உதவியுடன், தலைவர் பதவி அறிவிப்பை நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்ற நிலையிலும், இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிட்டபோது, குறைவான ஓட்டுகளை சிலர் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கும் பதவி வாங்கி தரும் முயற்சியில், கோஷ்டி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவும் தேர்தல் முடிவு அறிவிப்பு தாமதத்திற்கு காரணம். இப்படி பல பிரச்னைகளால், தமிழக காங்., முன்னேற்றம் தடைபடுகிறது.
வ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -