காற்றழுத்த தாழ்வு வலுவடைவது தாமதம்; நாளை முதல் 5 மாவட்டங்களில் கனமழை
காற்றழுத்த தாழ்வு வலுவடைவது தாமதம்; நாளை முதல் 5 மாவட்டங்களில் கனமழை
ADDED : டிச 09, 2024 04:17 AM

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நாளை(டிச.,10) முதல் கனமழை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மையத்தின் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி யில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த அமைப்பு வலுவடையா மல், அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், இது மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம்.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், 14ம் தேதி வரை மிதமான மழை தொடரும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
'ஆரஞ்ச் அலெர்ட்'
கடலுார், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மறுதினம் மிக கனமழை பெய்யலாம். இதற்கான, 'ஆரஞ்ச் அெலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில், அடுத்த சில நாட்களுக்கு மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.