ADDED : டிச 29, 2024 12:39 AM
நாமக்கல்:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மாநில தலைவர் முகமது அலி கூறியதாவது:
தமிழகம் முழுதும், 15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு, 2.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 35 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது.
மொத்த உற்பத்தியில், 12 - 13 சதவீதம் மட்டுமே கூட்டுறவு அமைப்புகள் கொள்முதல் செய்கின்றன. மற்ற அனைத்தும், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிர்வாகத்தில் பல மட்டங்களில் ஊழலும், ஊதாரித்தனமும் தொடர்கிறது.
பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக சத்துணவில் பாலை சேர்க்க வேண்டும். இதனால், கூடுதலாக 10 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் செய்ய முடியும்.
தமிழக அரசியலில், ஆட்சியில், அதிகாரத்தில் உள்ள பலருக்கும், தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்பு இருக்கிறது என அச்சப்படுகிறோம்.
அதில், நிர்வாகத்திலும், பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியில் உள்ளவர்கள், அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டில் உள்ளனர். அதனால், தனியார் நிறுவனங்களை பாதுகாப்பதே இவர்களின் மறைமுகமான திட்டமாக இருக்கிறது. அதனால் தான், ஆவினில் பால் கொள்முதலை உயர்த்தவில்லை.
முதற்கட்டமாக, பால் கொள்முதலை, 50 லட்சம் லிட்டராக அதிகப்படுத்த வேண்டும். கொள்முதல் விலையில், 10 ரூபாய் உயர்த்தி, பசும்பால் லிட்டருக்கு, 45 ரூபாய், எருமை பால், 54 ரூபாய்க்கு வழங்க வேண்டும்.
முகவர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 6, 7ல், தமிழகம் முழுதும் கறவை மாடுகளுடன் ஆரம்ப சங்கங்கள், ஆவின் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

