ADDED : நவ 15, 2024 05:14 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, ஐகோர்ட் உத்தரவுப்படி, கோவில் மண்டப கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின்போது சுவாமி சிலைகளை வைத்து அலங்காரம் செய்ய, அங்குள்ள இரண்டரை சென்ட் இடத்தில் கடந்த 2019ல் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் கட்டப்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ''கோவில் மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் எனக்கு சொந்தமானது, அதற்கு வருவாய் துறை மூலம் பட்டா வாங்கியுள்ளேன்.
அந்த இடத்தில் கோவில் திருவிழா சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது'' என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், மண்டபத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது.
அதன் பேரில் நேற்று உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், பி.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலையில், கொட்டும் மழையில் கோவில் மண்டபத்தை இடித்து அகற்றினர்.
மண்டபத்தை இடிக்க பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.