டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு இதுவரை 14,000 பேருக்கு சிகிச்சை
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு இதுவரை 14,000 பேருக்கு சிகிச்சை
ADDED : அக் 04, 2025 01:25 AM
சென்னை:தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலால் தினமும், 70 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், டெங்கு பாதித்தவர்களில், ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன.
இதன் காரணமாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு, மாநிலம் முழுதும் தீவிரமடைந்து உள்ளது.
ஏற்கனவே, 'இன்ப்ளுயன்ஸா' வகை காய்ச்சல் அதிகரித்து, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பும் அதிகமாகி வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏழு பேர் மரணம் இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலம் என்பதால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தினமும், 60 முதல் 70 பேர் வரை, டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி, இந்தாண்டில் இதுவரை, 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் என்பதால், இந்தாண்டு இறுதிக்குள், 20,000 பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொது மக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
சுத்தம் செய்யணும் மேலும், வீட்டில் உள்ள, 'பிரிஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய பகுதியை, வாரத்தில் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்கள் இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும்.
அப்போது தான், 'ஏடிஸ்' கொசு பரவலை தடுக்க முடியும். 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியை தடுப்பது மக்களுடைய பொறுப்பு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.