வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
ADDED : ஆக 11, 2025 02:45 PM

சென்னை; ஆக.13ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை;
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 13ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
ஆக.12ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆக.13ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இங்கு ஆக.11 முதல் ஆக. 15 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.