வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
UPDATED : டிச 10, 2024 02:00 PM
ADDED : டிச 10, 2024 12:45 PM

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று(டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கடந்த 24 மணி நேரம், இந்த தாழ்வுப் பகுதி ஒரே இடத்தில் நகராமல் இருந்தது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் தமிழகம், இலங்கை நோக்கி நகர்கிறது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று (டிச.,10)
மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (டிச.,11)
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.