கவர்னர் மாளிகை போட்டியில் வென்றவர் விபரம் வெளியீடு
கவர்னர் மாளிகை போட்டியில் வென்றவர் விபரம் வெளியீடு
ADDED : நவ 26, 2024 02:10 AM
சென்னை: 'அரசியலமைப்பு தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் ஜன., 26 குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்' என, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
இன்று நடக்கும் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கவர்னர் ரவி உத்தரவின்படி, கவர்னர் மாளிகை சார்பில் தமிழகம் முழுதும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர்கள் இடையே, இந்திய அரசியல் அமைப்பின் கோட்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அரசியலமைப்பு தொடர்பான தலைப்புகளில், தமிழ், ஆங்கிலம் மொழிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என, இரண்டு பிரிவாக, பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
அதேபோல, கல்லுாரி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்கள் விபரத்தை, கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு, முறையே, 50,000, 30,000, 20,000 ரூபாய் ரொக்கப் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பு பரிசாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வரும் ஜன., 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.