ADDED : மார் 23, 2024 05:01 PM

திண்டுக்கல்: கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையில் இரட்டை ரயில் வழித்தடம் அமைக்கும் பணியால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 26 வரை மாற்று வழித்தடத்தில் செல்கிறது.
கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையில் இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி சில தினங்களாக நடக்கிறது. இதனால் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மார்ச் 26 வரை திண்டுக்கல்லிலிருந்து பழநி,பொள்ளாச்சி,பாலக்காடு வழியாக குருவாயூர் செல்லும்,மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து புறப்படும் ரயில் அங்கிருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி வழியாக திண்டுக்கல் வந்து இங்கிருந்து சென்னை புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 3:30 மணிக்கு திண்டுக்கல் வந்தது. தொடர்ந்து விருதுநகர்,திருநெல்வேலி,நாகர்கோவில்,கன்னியாகுமரி வழித்தடத்தில் செல்லாமல் பழநி,பொள்ளாச்சி,பாலக்காடு வழியாக குருவாயூர் சென்றது. விருதுநகர், திருநெல்வேலி,நாகர்கோவில்,கன்னியாகுமரி செல்லும் பயணிகள் திண்டுக்கல்லில் இறங்கினர். இந்த ரயில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் அதிகமானோர் பயன்படுத்துவதால் ரயில்வே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

