வெப்பத்தால் சாதனங்கள் செயலிழந்தது நம்பும்படியாக இல்லை: அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
வெப்பத்தால் சாதனங்கள் செயலிழந்தது நம்பும்படியாக இல்லை: அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 28, 2024 08:17 PM

ஊட்டி:வெப்பம் காரணமாக சாதனங்கள் செயலிழந்தது என்பது நம்பும்படியாக இல்லை. என, அ.தி.மு.க., வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ம் தேதி நடந்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளில் அமைக்கப்பட்ட, 1619 ஓட்டு சாவடி மையங்களினின் ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்து ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கல்லூரி ஸ்ட்ராங் ரூம் வளாகத்தை சுற்றி, 180 சி.சி.டிவி., கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம், கண்காணித்து வருகின்றனர். இதை, அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள், ஓட்டு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை டி.வி., மூலம் பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை முகவர்கள் அமரும் இடத்தில் சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் திடீரென டி.வி., திரையில் ஒளிபரப்பாகாமல் போய்விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து அங்குள்ள தொழில் நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருணாவும் அங்கு சென்று ஆய்வு செய்தார். இச்சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டார்.
பின், லோகேஷ் தமிழ் செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணிகள் வரை சரியாக நடந்தது.வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் இருந்து அ.தி.மு.க.,விற்கு பல்வேறு இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் நேற்று மாலை 6:17 மணி முதல் 6.43 மணி வரை கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன.
அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்னை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஊட்டி நல்ல சீதோஷ்ண நிலை உள்ள ஊரில் அதிக வெப்பம் காரணமாக சாதனங்கள் செயலிழக்கிறது என்பது நம்பும்படியாக இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் தரமற்றதாக பொருத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்து வரும் நிலையில், இங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை சந்தேகத்தை கிளப்புகிறது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளார். சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

