ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசையில் நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசையில் நீராடிய பக்தர்கள்
ADDED : மார் 10, 2024 11:26 PM

ராமேஸ்வரம் : மாசி அமாவாசையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
இக்கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா மார்ச் 1ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாள் திருவிழாவான நேற்று அமாவாசையையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முதலில் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பிறகு கடலில் நீராடினர்.
கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையிலும் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து மதியம் 2:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.
பின் பக்தர்களுக்கு தீர்த்தம்வாரி கொடுக்கும் உற்ஸவம் நடந்தது.--

