உலகம் முழுதும் செல்லும் தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் கைகளால் உயிர்த்தெழும் தெய்வீக வடிவங்கள்
உலகம் முழுதும் செல்லும் தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் கைகளால் உயிர்த்தெழும் தெய்வீக வடிவங்கள்
ADDED : அக் 05, 2025 01:03 AM

ஆத்துார்:கைகளால் உயிர்த்தெழும் தெய்வீக சிலைகள் உள்ளிட்ட சிற்பங்கள், தம்மம்பட்டியில் இருந்து உலகம் முழுதும் விற்பனைக்கு செல்கின்றன.
சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலுார், அரும்பாவூர் பகுதிகளில் உள்ள குடும்பங்கள், பல தலைமுறைகளாக சிற்பம் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலை நயம் மரச்சிற்பங்களை செதுக்க, தற்போது, 'உட்கார்விங்' என்ற நவீன முறை பயன்படுத்தப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி, டில்லி, கேரளா, கொல்கட்டா பொருட்காட்சிகளிலும், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும், சிலைகளை ஏற்றுமதி செய்கின்றனர். 2020ல், தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அதற்கான உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தம்மம்பட்டி மரச்சிற்பிகள் சந்திரன், சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:
மரத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் தொழிலை, தம்மம்பட்டியில், 50 குடும்பத்தை சேர்ந்த, 72 பேர் செய்து வருகிறோம். வாகை, மாவிலங்கம், அத்தி, வேங்கை மரங்களில், கலை நயத்துடன் சிற்பம் செதுக்குகிறோம்.
ஒன்றரை அடி முதல், 10 அடி வரை முருகன், விநாயகர், கிருஷ்ணன், நடராஜர், சரஸ்வதி, லட்சுமி, ராமர், கோவில் வாகனம் கொடி மரம், கட்சி தலைவர்களின் உருவம் பொறித்த சிலைகள், சுவாமி உருவம் பொறித்த மரக்கதவுகள் என, பல வகை சிற்பங்களை செய்கிறோம்.
பிரதமருக்கு பரிசு ஒன்றரை அடி சிலை, 5,000 ரூபாய், 10 அடி சிலை, 2 முதல், 3 லட்சம் ரூபாய் இருக்கும். நாங்கள் வடிவமைத்த கிருஷ்ணர் சிலையை, பூம்புகார் மூலம் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் விலை க்கு வாங்கி, பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.
சிலை வடிவமைப்பவர்களில் சிலர், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.