நயன்தாரா, நெட்பிலிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர அனுமதி
நயன்தாரா, நெட்பிலிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர அனுமதி
ADDED : நவ 28, 2024 01:15 AM
சென்னை:நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர, நடிகர் தனுஷ்க்கு சொந்தமான படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுைஷ கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, வொண்டர்பார் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரேயாஸ் சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த, நானும் ரவுடி தான் படத்தை, விக்னேஷ் சிவன் இயக்கினார். கடந்த 2015ல் படம் வெளியானது. பதிப்புரிமை சட்டத்தின் கீழ், வேலைக்கு பணம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது. படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பின், நெட்பிலிக்ஸ் யூடியூப் சானலில், நயன்தாராவின் திருமணம் தொடர்பான வீடியோ 'டிரெய்லர்' வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியில், எங்கள் படத் தயாரிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், படத்தில் இடம் பெறாத காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு, எங்களின் அனுமதியை பெறவில்லை. வேண்டுமென்றே பதிப்புரிமையை மீறியுள்ளார்.
தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்காலிகமாக மதிப்பிட்டுள்ள இழப்பீடாக, ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு விசாரணையின் போது, இழப்பீட்டு தொகையை உறுதி செய்ய அனுமதிக்க வேண்டும். மும்பையில் உள்ள 'நெட்பிலிக்ஸ்' நிறுவனத்துக்கு எதிராக, இங்கு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அப்துல்குத்துாஸ் முன், விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தொடர்வதற்கு, மனுதாரருக்கு அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இழப்பீடு கோரிய வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும்.