தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி
தர்மபுரி தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி
ADDED : ஏப் 11, 2025 08:14 PM
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளயுள்ளது. நிர்வாகிகளின் கடும் அதிருப்தியால், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக வேளாண் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில், பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி ஒத்தி வைக்கப்பட்டது. அமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கு, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல் மற்றும் அமைச்சர் வருகையின் போது, அவருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என உளவுத்துறை அளித்த தகவலே காரணம் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது அமைச்சர் பன்னீர்செல்வம், தர்மபுரி மாவட்டத்திற்கு தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வெளிமாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர் பன்னீர்செல்வத்தால், கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு, கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது என, கட்சியினர் புலம்புகின்றனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலராக இருந்த தடங்கம் சுப்ரமணியை, கடந்த, பிப்., 23ல் மாற்றிய தி.மு.க., தலைமை, வருக்கு பதிலாக தர்மசெல்வனை நியமனம் செய்தது. உதயநிதி மூலம் தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளராக பதவி பெற்றது, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிடிக்கவில்லை. இதனால், தர்மசெல்வன் பதவியில் இருந்த, 28 நாட்களும், தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வரவில்லை.
இந்நிலையில், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை மிரட்டுவது போல பேசிய தர்மசெல்வனை பதவியில் இருந்து நீக்கியது தலைமை. தர்மபுரி எம்.பி., மணி புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை கட்சியினர் ஏற்கவில்லை.
இதற்கிடையில், தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் பிரச்னைகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வமே காரணம் என முடிவெடுத்த தொண்டர்கள், சமூக வலைதளங்களில், 'கோ பேக் பன்னீர்செல்வம்' என, பதிவிட்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் தேவ் ஆனந்த் ஆகியோர் அழுத்தத்தால் எஸ்.பி., அலுவலகத்திற்கு தி.மு.க., நிர்வாகிகளை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இது லோக்கல் தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் மணி, தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், தர்மசெல்வன் ஆகியோர் தனித்தனியாக கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. அமைச்சர் வருகையின் போது, தி.மு.க., நிர்வாகிகள் அவருக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, அமைச்சரின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதே போல, தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்டத்திலும் கோஷ்டி பூசல் தலைவரித்தாடுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

