பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமியுடன் சந்திப்பா
பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமியுடன் சந்திப்பா
UPDATED : பிப் 24, 2024 10:44 AM
ADDED : பிப் 23, 2024 03:17 PM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் தவித்து வரும் பா.ம.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுடன் திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறது. இரட்டை இலக்கில் லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி, மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.,விடம் பா.ம.க., வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக பா.ம.க., எந்தப் பேச்சையும் இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரின் கார்கள், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டு முன்பு நின்றன. இதனால் அவர்கள் மூவரும் பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் பரவியது. அதிலும் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே, ராமதாசின் துாதர்களாக அவர்கள் மூவரும் வந்திருக்கலாம் என கூறப்பட்டது.
அமைச்சர் வீட்டுக்குத்தான் போனோம்
பா.ம.க., எம்.எல்.ஏ., சிவகுமார் கூறுகையில், எங்கள் தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் தொடர்பான கோரிக்கைகள் வைப்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்திக்கவே பசுமைவழிச் சாலையில் உள்ள அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். கீதா ஜீவன் வீட் டிற்கு அருகில்தான் பழனிசாமி வீடு இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அங்கு கார்களை நிறுத்தி விட்டு அமைச்சர் வீட்டிற்குச் சென்றோம். பழனிசாமி வீடு அருகே பா.ம.க., கொடி கட்டப்பட்ட எங்கள் கார்கள் நின்றதால் கூட்டணி பேச்சு என செய்தி பரப்பி விட்டார்கள். நாங்கள் பழனிசாமியை சந்திக்கவில்லை. அது தவறான செய்தி என்றார்.