ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?
ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?
UPDATED : மார் 01, 2026 10:46 PM
ADDED : மார் 01, 2026 02:35 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த சிங்.எஸ்.செல்வராஜ் என்பவர், அ.தி.மு.க., நகர செயலராகவும், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர்.
இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெய ல லிதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவங்களை பட்டு ஜரிகையால் பொறித்து தயாரிக்கப்பட்ட புடவை மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் உருவம் பொறித்த புடவை ஆகியவற்றை, பன்னீர்செல்வத்திடம் கடந்த 2020ல் கொடுத்து உள்ளார்.
இதற்கான தொகை 3 லட்சம் ரூபாயை, செல்வராஜுக்கு, பன்னீர்செல்வம் வழங்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், 'முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., என்னிடம் வாங்கிய பட்டுப்புடவைக்கான தொகையை, இன்னாள் முதல்வர் மீட்டு தருவாரா?' என கேட்டு, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, திருபுவனம் பகுதி முழுதும் போஸ்டர்கள் ஒட்டினார் செல்வராஜ்.
செல்வராஜ் கூறியதாவது:
திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டுப்புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறது.
இதற்காக அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து, வாழ்த்து பெற்றபோது, நினைவுப்பரிசாக பட்டுப்புடவையை வழங்கினோம்.
இதையடுத்து, பிரதமர் மோடி கோவைக்கு வந்தபோது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்குவதற்காக, பிரதமர் மோடி உருவம் பொறித்த பட்டுப்புடவையை பன்னீர்செல்வம் கேட்டார்.
அதற்கான பணத்தை தருவதாகவும் கூறியதை அடுத்து, அவர் விரும்பியபடியே புடவையை தயார் செய்து, கோவை கொண்டு சென்றேன். பன்னீர்செல்வம் அதை வாங்கிச் சென்றாரே தவிர, அதற்கான பணத்தை பல முறை கேட்டும் தரவில்லை.
தற்போது அவர், தி.மு.க.,வுக்கு சென்று விட்ட நிலையில், எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, முதல்வர் ஸ்டாலின் தான் பெற்று தர வேண்டும். அதை வலியுறுத்தியே, போஸ்டர் அச்சடித்து ஒட்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

