யானை உங்களிடம் முறையிட்டதா? ரங்கராஜனிடம் ஐகோர்ட் கேள்வி
யானை உங்களிடம் முறையிட்டதா? ரங்கராஜனிடம் ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜன 10, 2025 01:04 AM
சென்னை:கோவில்கள் தொடர்பாக வழக்கு தொடரும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவில்கள் தொடர்பாக, வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.
அந்த வரிசையில், 'ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள, ஆண்டாள், லட்சுமி யானைகளுக்கு, 10 ஏக்கர் நிலத்தை, கொள்ளிடம் ஆற்றங்கரை அல்லது வேறு ஏதேனும் இடத்தில் ஒதுக்க வேண்டும்.
'அந்த நிலத்தில் யானைகளை பராமரிக்க உத்தரவிட வேண்டும்' என, 2021ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. மனுதாரர் ஆஜராகி இருந்தார்.
அவரிடம் நீதிபதிகள், 'தங்களுக்கு இந்த வசதிகள் வேண்டும் என, யானைகள் உங்களிடம் புகார் அளித்ததா? இந்த வழக்கை தொடர உங்களுக்கு என்ன உரிமை உள்ளது' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ரங்கராஜன் நரசிம்மன், 'நேர்மையான முறையில் தான், இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்' என்றார்.
இதையடுத்து, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனின் பின்னணி குறித்து விசாரிக்க, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.