'டிஜிட்டல்' கைது மோசடி வழக்கு: ரூ.38.97 கோடி முடக்கம்
'டிஜிட்டல்' கைது மோசடி வழக்கு: ரூ.38.97 கோடி முடக்கம்
ADDED : ஜன 23, 2026 02:48 AM

சென்னை: 'பொது மக்களை, 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக மிரட்டி, சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த, 38.97 கோடி ரூபாய், பல வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது' என, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களில் ஈடுபட்ட, 1,269 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 320 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள், தங்களை சி.பி.ஐ., உள்ளிட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக் கூறி, 'ஆன்லைன்' வாயிலாக, டிஜிட்டல் கைது செய்திருப்பதாக, பொது மக்களை மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2025ல், டிஜிட்டல் கைது பண மோசடி, 124 கோடி ரூபாயாக இருந்தது.
டிஜிட்டல் கைது என மிரட்டி, சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த வழக்குகளில், அவர்களின் கைகளுக்கு பணம் செல்வதற்கு முன், 38.97 கோடி ரூபாயை, பல வங்கிகளில் முடக்கி வைத்துள்ளோம்.
தொடர்ச்சியான விசாரணை, வங்கிகளுடன் ஒருங்கிணைப்பு, விரைவான சட்ட நடவடிக்கை வாயிலாக, சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த தொகையில், 9.21 கோடி ரூபாயை மீட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

