'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED : மார் 29, 2026 02:50 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, சென்னையில் நேற்று துவங்கிய வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தங்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, தெளிவான வழிகாட்டுதலை பெற, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'வழிகாட்டி' நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று காலை 10:40 மணிக்கு துவங்கியது.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஸ்வ வித்யபீடம், ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி இணைந்து, இரண்டு நாட்கள் நடத்தும், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை, தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன குழுமத்தின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை முதல்வர் லிஜோ ஜேக்கப் வர்கீஸ், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்வி நிறுவன முதல்வர் மகேஷ்வரி, கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் முதல் அமர்வில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, 1,000க்கும் அதிகமான மாணவ - மாணவியர், தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, ஓய்வு பெற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன முதல்வர் சவுந்தரராஜன், ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் மகேஷ்வரி, தொழில்துறை நிபுணர், பரதன் பிரகஹலாத், அம்ரிதா விஸ்வ வித்யபீடம் கல்வி நிறுவனத்தின் மாணவர் துறைத் தலைவர் பிரசன்ன குமார், சென்னை எம்.ஐ.டி., கல்வி நிறுவன பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசியதுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
பல்கலை, கல்லுாரிகளின்
கல்வி சார் அரங்குகள்
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கும் அரங்கில், தமிழகத்தில் உள்ள 80க்கும் அதிகமான, பல்கலை மற்றும் கல்லுாரிகளின் சார்பில், அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதை, கல்வி நிறுவன முதல்வர்கள் திறந்து வைத்தனர். அரங்கில், 'தினமலர்' நாளிதழின், தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கம் எண் 68ல், அந்துமணி எழுதிய, 'பார்த்தது, கேட்டது, படித்தது' மற்றும் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகள்.
பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுதிய, உங்களில் ஒருவன்; பிரபல எழுத்தாளர்களின் கல்வி சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு, 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
