சிறு நிறுவனங்களுக்கு விற்பனை தொகை ரூ.2,000 கோடியை எட்டிய பட்டுவாடா
சிறு நிறுவனங்களுக்கு விற்பனை தொகை ரூ.2,000 கோடியை எட்டிய பட்டுவாடா
ADDED : மார் 17, 2024 04:07 AM
சென்னை : அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வினியோகம் உள்ளிட்ட சேவைகள் வழங்கியதற்காக, தமிழக அரசின் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் சாதனங்கள், உதிரிபாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அவற்றிடம் பொருட்கள் வாங்கியது உள்ளிட்ட சேவைகளை பெற்ற அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் தருவதில்லை.
இதனால், மூலப்பொருட்கள் வாங்க பணம் இல்லாமலும், சம்பளம் தர முடியாமலும் பல நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்குகின்றன.
இணைந்தன
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசின், 'பேம் டி.என்' எனப்படும், குறு, சிறு, நடுத்தர தொழில் வசதியாக்கல் நிறுவனம், 'டி.என்.டிரெட்ஸ்' எனப்படும் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டம், 2022 ஆகஸ்டில் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், டி.என்.டிரெட்ஸ் இணையதளத்தில், 100க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களும், 1,300 குறு, சிறு நிறுவனங்களும், பல வங்கிகளும் இணைந்து உள்ளன.
அரசு நிறுவனத்திடம் இருந்து தனக்கு வர வேண்டிய விற்பனை தொகை ஆவணங்களை, இணையதளத்தில் சிறு நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு நிறுவனம், அந்த தொகைக்கு ஒப்புதல் அளிக்கும்.
அந்நிறுவனம் சார்பில், விற்பனை தொகையை சம்பந்தப்பட்ட சப்ளை நிறுவனத்திற்கு வழங்க வங்கிகள் முன்வரும்.
இதற்காக, ஒவ்வொரு வங்கியும் மொத்த தொகையில் தள்ளுபடி கேட்கும். அதில், விருப்பமான வங்கியை தேர்வு செய்வு செய்ததும், தள்ளுபடி போக மீதி தொகை உடனே வழங்கப்படும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்திடம் இருந்து, வங்கி பெற்றுக் கொள்ளும்.
விழிப்பணர்வு
இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குறு, சிறு நிறுவனங்களுக்கு உடனுக்குடன் விற்பனை தொகை கிடைக்கும், வர்த்தக வரவு தள்ளுபடி திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பல நிறுவனங்களும், அத்திட்டத்தில் இணைந்து வருகின்றன. இதுவரை, 903 நிறுவனங்களுக்கு, 2,000 கோடி ரூபாய் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

