கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை; சொல்கிறார் ஓபிஎஸ்
கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை; சொல்கிறார் ஓபிஎஸ்
ADDED : ஆக 03, 2025 04:57 PM

சென்னை:  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை; அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதிமுகவை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டசபை பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்ஜிஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டி தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், திமுக ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் தமிழகத்திற்கு  எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்த வேண்டும்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.
இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி குறித்த முடிவு கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

