பாரபட்சமான அகவிலைப்படி உயர்வு: குடிநீர் வாரியத்தினர் குமுறல்
பாரபட்சமான அகவிலைப்படி உயர்வு: குடிநீர் வாரியத்தினர் குமுறல்
ADDED : டிச 09, 2024 06:14 AM

மதுரை : 'அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவை பாரபட்சமாக செயல்படுத்துவதாக' அரசு செயலர் மீது குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதனால் அவர்களுக்கு 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு கிடைத்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோர் தங்கள் துறை செயலருக்கு அனுமதி வேண்டி கடிதம் எழுதினர்.
இருதுறைகளுக்கும் செயலராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரான கார்த்திகேயன் உள்ளார்.
அவரது அனுமதி கடிதத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு கடந்த டிச.4 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறையின் ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1 முதல் அமல்படுத்தி உத்தர விட்டுள்ளார்.
இதனால் குடிநீர் வாரியத்தினருக்கு 5 மாதங்கள் குறைவாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். எனவே அத்துறை ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குடிநீர் வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் பாண்டி கூறுகையில் ''இருநிர்வாகத்திற்கும் பொதுவான அரசு செயலரே இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.
முதல்வரே கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தும்படி கூறியும், முதன்மை செயலாளர் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என செயல்படுவது அதிருப்தியை அளிக்கிறது.
இதுதான் சமத்துவமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த 2022 ஜனவரி முதல் 2024 வரை இதுபோல குடிநீர் வாரியத்தினருக்கு தாமதமாகவே அகவிலைப்படி உயர்வை வழங்குகின்றனர். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.