காப்பீடு நிறுவன தகவல் திருட்டு விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
காப்பீடு நிறுவன தகவல் திருட்டு விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : அக் 24, 2024 01:55 AM
சென்னை:'ஸ்டார் ஹெல்த்' காப்பீடு நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
'ஸ்டார் ஹெல்த்' காப்பீடு நிறுவனத்தின் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முகவரி, மொபைல் போன், 'பான்' எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள், சீனாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்றில், கடந்த மாதம் வெளியாகின. இது, அந்நிறுவன வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, பஞ்சாப்பைச் சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஹிமான்ஷு பதக் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என, 2022ல் 'ஸ்டார் ஹெல்த்' காப்பீடு நிறுவனத்துக்கு அறிக்கை அளித்தேன்.
'இருப்பினும், அந்த நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காததால், இந்த தகவல் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சம்பந்தப்பட்ட நபர்கள் தான் தகவல் திருட்டு குறித்து புகார் அளிக்க வேண்டும். இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தான், இதுதொடர்பாக விசாரிக்க முடியும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தரப்பில், 'சைபர் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில், 'மனுதாரர் நிறுவனம் அனுமதியின்றி தங்கள் இணையதளத்துக்குள் நுழைந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.