கொள்ளிடத்தில் தண்ணீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
கொள்ளிடத்தில் தண்ணீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : பிப் 22, 2024 02:41 AM
மதுரை:குடிநீர் திட்டத்திற்காக திருச்சி மாவட்டம் அன்பில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச் சங்க துணைச் செயலர் கஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றில், 30 இடங்களில் குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்பில் மற்றும் அருகிலுள்ள 20 கிராமங்கள் விவசாயத்திற்கு கொள்ளிடம் ஆற்று நீரை நம்பியுள்ளன.
ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, லால்குடி, புள்ளம்பாடி பகுதி புதிய குடிநீர் திட்டத்திற்காக தமிழக அரசு, அன்பில் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க உள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் போராடினர். குடிநீர் திட்டப் பணிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:
அறிவியல் பூர்வமாக குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு செய்த பின், கீழ அன்பில் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் பட்சத்தில் இம்மன்றத்தை அணுகலாம். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.