மாலை அணிவிப்பதில் தகராறு த.வெ.க.,வினர் கோஷ்டி மோதல்
மாலை அணிவிப்பதில் தகராறு த.வெ.க.,வினர் கோஷ்டி மோதல்
ADDED : அக் 31, 2025 01:12 AM

துாத்துக்குடி:  துாத்துக்குடியில், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் த.வெ.க.,வினர் இரு பிரிவாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
த.வெ.க.,வில் துாத்துக்குடி மாவட்டத்திற்கு இதுவரை நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், பல அணிகளாக, அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் துாத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் என கூறிக் கொண்டு அஜிதா ஆக்னல், முருகன், சாமுவேல்ராஜ் ஆகியோர் தனித்தனியே, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தேவர் சிலைக்கு, முருகன் தலைமையிலான த.வெ.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, துாத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் என கூறிக் கொள்ளும் சரவணன் தலைமையில் த.வெ.க.,வினர்  தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.
இரண்டு கோஷ்டிகளும், ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு கோஷ்டியும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

