மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி
மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி
ADDED : மே 17, 2025 04:10 AM

மதுரை: 'மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) முன்னிலையில் தொகுதியில் உள்ள குறைகளை கேட்டால் எப்படி சுதந்திரமாக சொல்ல முடியும்; தொகுதி பொறுப்பாளர் தங்கம் தென்னரசு கண் துடைப்பாக கூட்டம் நடத்தலாமா' என மதுரை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கான தி.மு.க., தொகுதி பொறுப்பாளராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்ட பின் முதன்முறையாக மதுரையில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மா.செ.,க்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா பங்கேற்றனர். தொகுதி வாரியாக குறைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஒரு சட்டசபை தொகுதியில் பகுதி/ஒன்றியம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் அழைக்கப்பட்டனர். அப்போது 'தொகுதியில் நிலவும் பிரச்னைகளை தெரிவியுங்கள்' என கூறப்பட்டது. அங்கு மா.செ.,க்கள் உடன் இருந்ததால் நிர்வாகிகளால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியவில்லை. வேறு வழியின்றி மா.செ.,க்களை மகிழ்விக்கும் வகையில் நிர்வாகிகள் பேசினர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதிவாரியாக குறைகளை தெரிவிக்க 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக தொகுதிக்குள் உட்கட்சி பிரச்னை உள்ளதா, யாரால் அந்த பிரச்னை ஏற்பட்டது, தீபாவளி, பொங்கலின்போது உரிய 'பட்டுவாடா' நடந்ததா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. மா.செ.,க்கள் முன்னிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு சுதந்திரமாக பதில் கூற முடியவில்லை. உண்மையான பதிலை தெரிவித்தால் மா.செ.,க்கள் எங்களை 'கட்டம் கட்டி' விடுவர். இது பொறுப்பாளருக்கும் தெரியும். மா.செ.,க்களையும் உடன் வைத்து குறைகளை கேட்கிறார். கூட்டம் கண்துடைப்பாக நடந்தது. மா.செ.,க்கள் இன்றி குறைகளை கேட்டால் உண்மை நிலவரத்தை தெரிவிக்க தயார் என்றனர்.