கொடை, ஊட்டியில் இ - பாஸ் முறை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி
கொடை, ஊட்டியில் இ - பாஸ் முறை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி
ADDED : அக் 15, 2024 06:30 AM
சென்னை,: 'ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணியருக்கு, 'இ- - பாஸ்' வழங்குவது, முறையாக அமல்படுத்தப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
தற்போது இந்த அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து வழக்குகளை விசாரித்து வருகிறது.
இந்த சிறப்பு அமர்வு கடந்த ஏப்ரலில், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் குவியும் வாகனங்கள் குறித்து அறிய, இ- - பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், அதில் எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது அதற்கு மேல் தங்குவரா என்ற முழு விபரங்களை பெற வேண்டும் என்றும், திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
குறிப்பிட்ட காலங்களில் இ - பாஸ் நடைமுறை தேதி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை தொடர்பான வழக்கு வழக்கு, சிறப்பு அமர்வு முன், சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இ- - பாஸ் தொடர்பாக, எந்த சோதனையும் செய்வதில்லை. நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன' என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அரசு தரப்பில், மலைவாசஸ்தலங்களில் இ - -பாஸ் முறையை, சரியாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளிக்க வேண்டாம். இ- - பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்துவது, தரமான சுற்றுலாவுக்கு வழிவகுக்கும்.
நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, இ- - பாஸ் வழங்குவதை, முறையாக அமல்படுத்துவது குறித்து, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இ- - பாஸ் பெற விண்ணப்பம் செய்பவர்களிடம், எப்போது வருகிறார்கள், எங்கு தங்க உள்ளனர், எத்தனை நாட்கள் தங்கவுள்ளனர் என்பது போன்ற விபரங்களை கட்டாயம் பெற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணை, நவ., 4க்கு தள்ளி வைத்தனர்.

