ADDED : பிப் 14, 2024 01:17 AM
சென்னை:''பெரிய தாலுகாக்களை பிரிக்க, நிதி நிலைக்கேற்ப தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வருவாய்த் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஸ்டாலின் குமார்: திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் உள்ள, உப்பிலியாபுரத்தை, புதிய தாலுகாவாக உருவாக்க வேண்டும்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: இதுபோல் நிறைய இடங்களில், தாலுகாக்களை பிரிக்க வேண்டி உள்ளது. தகுந்த நேரத்தில் நிதி நிலைக்கேற்ப, முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - சுதர்சனம்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில், ஒன்பது பிர்காக்கள் உள்ளன. நான்கு லட்சம் மக்கள் தொகை உள்ளது. வெள்ளம் வந்தபோது, வருவாய்த் துறை அலுவலர்கள், பணிச்சுமை காரணமாக மிகவும் சிரமப்பட்டனர். அந்த தாலுகாவை பிரிக்க வேண்டும்.
அமைச்சர் ராமச்சந்திரன்: இது பெரிய தாலுகாவாக இருக்கிறது என்பது, அரசின் கவனத்தில் இருக்கிறது. எதிர்காலத்தில் தாலுகாக்களை பிரிக்கிற நேரத்தில், இந்த தாலுகாவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

