ADDED : அக் 04, 2024 10:30 PM
சென்னை:'அரசு ஊழியர்கள் தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல்களை களைந்து, விரைவாக முன்பணம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் ஆகியோர், நிதித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனு:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணமாக 10,000 ரூபாய், பண்டிகைக்கு ஒரு மாதம் முன் வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, முன்பணம் பெற விரும்புவோர், 'களஞ்சியம்' செயலி வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, கருவூல கணக்கு துறை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
அதில், இம்மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு இன்னும், 27 நாட்களே உள்ள நிலையில், களஞ்சியம் செயலி கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை. அனைத்து பணியாளர்களும் செயலி வழியே விண்ணப்பிப்பது, நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
இதுபோன்ற தொழில்நுட்ப இடர்ப்பாடுகளை வைத்துக் கொண்டு, பணியாளர்கள் தீபாவளி முன்பணம் பெற, களஞ்சியம் செயலி வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நிர்பந்திப்பது, எந்த வகையிலும் நியாயமானதாக தெரியவில்லை.
எனவே, இதில் உள்ள சிக்கல்களை களைந்து, பணியாளர்களுக்கு தீபாவளி முன்பணம் விரைந்து வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.