தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளால் பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு: சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளால் பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு: சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு
ADDED : டிச 19, 2024 05:58 AM

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில், அண்ணா தொழிற்சங்கம் அப்பட்டமான பொய் கூறுவதாக சி.ஐ.டி.யு., தெரிவித்துள்ளது.
'போக்குவரத்து துறை அமைச்சர் கூறியபடி, ஓய்வூதியர்களின் நிலுவை அகவிலைப்படி உயர்வை தவணை முறையில் பெறுவதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி சங்கங்கள் கடந்த காலத்தில் ஒப்புக் கொள்ளவில்லை' என, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலகண்ணன் நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கை:
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் அப்பட்டமான பொய்யை, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலகண்ணன் கூறியுள்ளார். எந்த தேதியில் நடந்த பேச்சில், இதுபற்றி பேசினார் என்பதை அவரால் கூற முடியுமா?
அப்படி ஒரு பேச்சு நடக்கவில்லை. போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை மறுத்து, அநீதி இழைத்தது அ.தி.மு.க., அரசு. அ.தி.மு.க., அரசின் வஞ்சனையை அப்படியே தொடர்ந்து அமல்படுத்தி, மிகக் கடுமையான பொருளாதார வன்முறையை, ஓய்வூதியர்கள் மீது தி.மு.க., அரசு தொடுத்துள்ளது.
அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகளுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை. இவ்விரு அரசுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட, அனைத்து தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.