ADDED : மார் 16, 2026 06:39 AM

சென்னை: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் காரணமாக, காஸ் சிலிண்டர் கிடைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகம் முழுதும், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், 'தமிழகத்திற்கான திட்டங்களும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை' என்பது உட்பட, பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில் எழும்பூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
காஞ்சிபுரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம், மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல் மாலை அணிவித்தும், பாடையில் சிலிண்டரை வைத்து ஊர்வலமாகவும் எடுத்து வரப்பட்டன.
தொண்டர்கள், சிலிண்டர்களை தலையில் துாக்கி வைத்தபடி, பங்கேற்றனர்.

