டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்
டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்
ADDED : டிச 14, 2024 02:39 AM
''டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் சரியான நேரத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் வாய்மூடி இருந்துவிட்டு தி.மு.க., அரசு தற்போது நாடகமாடுகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
டில்லியில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலுாரில் உள்ள அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில், கனிம சுரங்கம் தோண்ட மத்திய அரசு முறைப்படியான அனுமதி அளித்தது. இதன் காரணமாக, 10 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்; 2200 ஆண்டுகள் பழமையான கற்கோவில்கள், சமணர் படுகைகள் அழிக்கப்படும் என்று அங்கிருக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மக்கள் பாதிக்கும்படியான எந்த விஷயத்தையும் மத்திய அரசு செய்யாது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்துப் பேசி, மக்களுக்கான பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினேன். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களின் நலனை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும்.
தமிழக அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்து விட்டு, இப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றதும், தமிழக சட்டசபையில் சுரங்கம் அமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக, 2023, செப்., 15ல் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இந்தாண்டு பிப்., 8ல் தமிழக அரசு விரிவான உள்ளீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இதன் அடிப்படையில்தான், மத்திய அரசு ஏலம் அறிவித்தது.
இந்த விபரங்களை மறைத்து, தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதை போல தி.மு.க., அரசு தொடர்ந்து நாடகமாடுகிறது. கடந்த ஓராண்டாக இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஏலம் அளித்த பின் அதை அரசியல் ஆக்குவது ஏன்.
இவ்வாறு கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

