ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து திமுக நிர்வாகி குடித்தனம்; அண்ணாமலை கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து திமுக நிர்வாகி குடித்தனம்; அண்ணாமலை கண்டனம்
UPDATED : மார் 09, 2026 03:02 PM
ADDED : மார் 09, 2026 12:26 PM

கோவை: கருணாநிதி ஆட்சியில் நிலத்தை அபகரித்து வந்த திமுகவினர், தற்போது ஸ்டாலின் ஆட்சியில், இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசுக்குச் சொந்தமான கட்டடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டதாக பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர், தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி, திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழ்கின்றன. மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை மக்கள் இவற்றைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் துணிச்சல் ஒரு சாதாரண திமுக நிர்வாகிக்கு வருமானால், அவரது பின்னணியில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதே பொருள்.
தமிழகம் முழுவதும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரசு மருத்துமனைகள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, அதனைக் கண்டுகொள்ளாமல், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையே ஐந்து ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?
கடந்த 2011ம் ஆண்டு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்று ஒரு புதிய துறையையே தொடங்கும் அளவுக்கு, மறைந்த திமுக முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலமான 2006 - 2011 காலகட்டத்தில், திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசுக்குச் சொந்தமான கட்டடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் திமுகவினர் இறங்கியுள்ளனர்.
உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

