'ஈ.டி., சோதனையில் தப்பிக்கவே தி.மு.க.,வுக்கு நேரம் இல்லை'
'ஈ.டி., சோதனையில் தப்பிக்கவே தி.மு.க.,வுக்கு நேரம் இல்லை'
ADDED : மே 21, 2025 04:57 AM

சென்னை:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கவுதம், 'நீட்' தேர்வு அச்சத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, 24வது மாணவர், நீட் தேர்வால் உயிரிழந்துள்ளார்.
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை, இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் ஒழிந்துவிடும் என, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் கூறிய அத்தனையும் பொய் என்பதை, மாணவர்கள் உணர வேண்டும்.
ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து, 'தம்பி'யை தப்பிக்க வைக்கவுமே, இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்யப் போகின்றனர்?
தி.மு.க.,வின் நாடகத்திற்கு மாணவர்கள் பலியாக வேண்டாம். வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை, நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து அவர்களிடம், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்ன பொய்க்காக, முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது மற்றொரு அறிக்கை:
தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறிவிட்ட காவல் துறை, அக்கட்சி நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில்கூட பாரபட்சம் காட்டுகிறது.
கடந்த வாரம், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுாரில், தனியார் கடையில் வேலை செய்து வந்த 34 வயதுடைய பெண் ஒருவர், பணி முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியில், நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து, வரும் 23ம் தேதி காலை 9:30 மணிக்கு, தஞ்சை புதிய தபால் நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

