தே.மு.தி.க., தலைமையக பெயர் 'கேப்டன் ஆலயம்' என மாற்றம்
தே.மு.தி.க., தலைமையக பெயர் 'கேப்டன் ஆலயம்' என மாற்றம்
ADDED : ஆக 26, 2024 06:31 AM

சென்னை: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், 72வது பிறந்த நாள் விழா, சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அங்கு வந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின், பொதுச்செயலர் பிரேமலதா கூறியதாவது:
விஜயகாந்த் முழு உருவச்சிலை மற்றும் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகத்தின் பெயர் இனி, 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதாக சொல்கின்றனர். அவர் எதற்காக வெளிநாடு போகிறார் என்பது, அனைவருக்கும் தெரியும். சென்னையில் பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. கார் பந்தயம் நடத்துவதற்கு இருங்காட்டுகோட்டையில் மைதானம் உள்ளது.
ஆனால், மக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணாகும்.இந்த கார் பந்தயத்தால், மக்களுக்கு என்ன பயன் என்பதை அமைச்சர் உதயநிதி தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மயக்கம்
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். காற்றோட்டம் குறைந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு, விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்தார்.
அவரை துாக்கிச் சென்று படுக்க வைத்து, ஆசுவாசப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் இயல்பு நிலைக்கு வரவில்லை.
எனவே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் நலமுடன் இருப்பதாக தே.மு.தி.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

