திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு; 5 தொகுதி கேட்கிறது மனிதநேய மக்கள் கட்சி
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு; 5 தொகுதி கேட்கிறது மனிதநேய மக்கள் கட்சி
UPDATED : பிப் 23, 2026 12:07 PM
ADDED : பிப் 22, 2026 11:57 PM

சென்னை: திமுக - மனித நேய மக்கள் கட்சி இடையே இன்று (பிப்ரவரி 23) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த முறை தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகள் தருமாறு மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்திய மதிமுக ராஜ்யசபா சீட் கேட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகள் உடனான பேச்சு வார்த்தையை தி.மு.க., நேற்று துவக்கியது. முதற்கட்டமாக, முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று (பிப்ரவரி 23) மனித நேய மக்கள் கட்சியினர் உடன் இன்று திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.
சென்னை அறிவாலயத்தில் நடந்த பேச்சில், தி.மு.க., குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, சிவா, ஆ.ராஜா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
2021ம் ஆண்டு தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் என 2 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறை மனித நேய மக்கள் கட்சியினர் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றனர். இது குறித்து ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 தொகுதிகள்
பேச்சுவார்த்தை பிறகு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: எங்களுக்கு 5 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து இருக்கிறோம். முதற்கட்ட பேச்சுவார்தை முடிந்து இருக்கிறது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பதாக கூறியுள்ளனர். உதய சூரியன் சின்னத்தில் தான் மனித நேய மக்கள் கட்சி இந்த முறை தேர்தலில் போட்டியிடுவோம். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
ராஜ்யசபா சீட் கேட்கும் மதிமுக!
சென்னை அண்ணா அறிவாலயத்தில்,
திமுக, மதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த முறை
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்ற மதிமுக
இம்முறை ராஜ்யசபா சீட் கேட்டுள்ளது.
பேச்சுவார்த்தை பிறகு மதிமுக
அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் கூறியதாவது: மதிமுக இந்த முறை
தனிச்சின்னத்தில் போட்டியிடும். ராஜ்யசபா சீட் வேண்டுமென கோரிக்கை
வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூ.,
வரும் 26ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 27ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடைபெற உள்ளது. அக்கட்சிகளை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடத்தப்படும்.

