மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் தி.மு.க., தலையீடு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் தி.மு.க., தலையீடு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : அக் 18, 2024 11:50 AM

சென்னை: 'மாநில மனித உரிமை ஆணையத்தில் தி.மு.க. அரசு தலையிடுகிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இ.பி.எஸ்., கூறியதாவது: பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரையும், மற்றும் ஒருவரையும் சிவகாஞ்சி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் கொடுமைப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் மணிக்குமார் ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளரை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகிய மூவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டிருந்தார். எந்த வித காரணமும் இல்லாமல் அந்த துணை காவல் கண்காணிப்பாளரை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவிற்கு ஸ்டாலினின் திமுக அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.