தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி சாடல்
தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி சாடல்
UPDATED : மார் 15, 2024 06:12 PM
ADDED : மார் 15, 2024 01:29 PM

நாகர்கோயில்: ‛‛ தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி'' என கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
தூக்கி எறிவார்கள்
1990களில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்; தமிழக மக்களும் வரும் தேர்தலில் தூக்கி எறிவார்கள். தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணி எடுபடாது; தி.மு.க., - காங்., கூட்டணி துடைத்தெறியப்படும். 'இண்டியா' கூட்டணியின் கர்வத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள்.
கொள்ளையடிப்பதே இலக்கு
இண்டியா கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீண்டது. 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் நீளும். ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இண்டியா கூட்டணி கட்சிகளின் இலக்கு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ., அலை வீசுகிறது. இண்டியா கூட்டணி தமிழகத்தில் எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.

தமிழக மண்ணில் மாற்றம்
காங்., ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல் செய்தனர். கன்னியாகுமரி மக்களை எப்படி சுரண்டலாம் என்று தி.மு.க.,- காங்., கூட்டணி காத்து கொண்டுள்ளது. தமிழக மண்ணில் பெரிய மாற்றத்தை காண்கிறேன். மார்த்தாண்டம்- பார்வதிபுரம் இடையிலான மேம்பாலம் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் நிறைவேறியது. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை நிறைவேற்றியது பா.ஜ.,
எதிரி
தி.மு.க., தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல. நமது கடந்த காலத்தையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை பார்க்க அக்கட்சி விரும்பவில்லை. தமிழகத்தில் டிவியில் காட்டுவதற்கும் தடை விதித்தது. இதனை உச்சநீதிமன்றம் கண்டித்தது. நமது பண்டாட்டின் மீது வெறுப்பை கக்குகிறது.
இண்டியா கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை மனதார பாராட்டுகிறேன் ரயில்வே பணிகளுக்காக 6,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., எதிரியாக உள்ளது; நம் பாரம்பரியத்தை எதிர்க்கும் எதிரி தி.மு.க.,

அனுமதிக்க மாட்டேன்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது காங்கிரஸ், தி.மு.க., அமைதியாக வேடிக்கை பார்த்தது. ஆனால், ஜல்லிக்கட்டை பாஜ., அரசு தான் மீட்டெடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. தமிழகத்தின் பாரம்பரியமிக்க சிறப்பு அம்சங்களை மோடி இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாது. பார்லிமென்டில் செங்கோல் நிறுவுவதை திமுக புறக்கணித்தது. இனிமேல், தமிழக பெருமையை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதனை அனுமதிக்க மாட்டேன்.
பதில் சொல்ல வேண்டும்

கன்னியாகுமரியில் இவ்வளவு பெரிய ஆதரவு, குரலை கேட்டு டில்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டு விட்டது. உங்களின் அன்பும், பாசமும் ஆதரவும் மொத்த இந்தியாவிற்கும் பலம் கொடுத்து கொண்டு உள்ளது. இண்டியா கூட்டணி கட்சியினர் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்தவர்கள். திமுக காங்கிரஸ் செய்த தப்புக்கும் பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

பெண்களுக்கான அரசு
பாஜ.., அரசு பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசு. ‛ இண்டியா ' கூட்டணிக்கு பெண்களை ஏமாற்ற மட்டும் தான் தெரியும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் அரசு பா.ஜ., அரசு. தமிழ்மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை என வருத்தம் கொள்கிறேன். கற்காதது மிகப்பெரிய குறையாக உள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழியில் பேசுவேன். இனிமேல் சமூக ஊடகங்களில், நமோ செயலியில் தமிழில் என்னுடைய குரலில் பேசுவேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


