சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
ADDED : ஜூன் 21, 2025 08:44 AM

தமிழகத்தில், 234 சட்ட சபை தொகுதிகளையும் சிவப்பு, ஆரஞ்சு, இளம்பச்சை, அடர் பச்சை என, நான்கு நிறங்களாக பிரித்து, 200 தொகுதிகளை கைப்பற்றும் இலக்கை அடைவதற்கான தேர்தல் வியூகங்களை, தி.மு.க., வகுத்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து, 159 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
25 பேர்
இதற்காக, பல கட்டங்களில் கட்சியினரும், கட்சிக்கு அப்பாற்பட்ட வியூக வகுப்பு நிறுவனங்களைச் சேர்ந்தோரும் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தேர்தல் வெற்றி, தோல்வி, சாதகம், பாதகம் ஆகியவை குறித்து, 'பென்' நிறுவனம் சமீபத்தில் தமிழக முழுதும் நடத்திய, 'சர்வே' அடிப்படையில், 100 தொகுதிகளில், தி.மு.க., கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.
தற்போதைய எம்.எல்.ஏ.,க்களில், 25 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்பதும், தெரிய வந்திருக்கிறது. அந்த சர்வே முடிவுகளை அடிப்படையாக வைத்து, தேர்தலை நோக்கிய செயல்பாடுகளில், நுணுக்கமாக சில விஷயங்களை அதிரடியாக செய்ய தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப, தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளையும், சிவப்பு, ஆரஞ்சு, இளம்பச்சை, அடர்பச்சை என நான்கு நிறங்களாக பிரித்துள்ளனர்.
அதாவது, கடந்த தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்த தொகுதிகள்; உட்கட்சி பூசல் அதிகமாக உள்ள தொகுதிகள்; வெற்றிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகள் ஆகியவை 'சிவப்பு' நிறமாக பிரிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கும் தொகுதிகள்; கடும் போட்டி நிலவும் தொகுதிகள் ஆகியவை 'ஆரஞ்சு' நிறத்துக்குள் வரும்.
தர்மசங்கடம்
முதற்கட்டமாக நடந்த சந்திப்பில் மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கேட்ட பல கேள்விகளுக்கும் நிர்வாகிகள் பதற்றத்தில் தெளிவாக பதில் அளிக்க தடுமாறினர். பலர் பதில் அளிக்கவே தயங்கினர்.
பலரும் மனம் விட்டு யதார்த்தத்தை சொல்ல தயங்கிய நிலையில், அவர்களின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்ட முதல்வர், புகார் பெட்டி ஒன்றை வைக்கச் சொல்லி, அதில், ஒவ்வொரு நிர்வாகியும் கட்சி நலனுக்கான தங்கள் கருத்துகளை ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவிக்கலாம் என கூறினார். அதையடுத்து, பலரும் தங்கள் கருத்துகளை எழுதி புகார் பெட்டியில் போட்டனர்.
சுற்றுப்பயணம்
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை, செப்., 17க்குள் முடித்து, மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
நமது நிருபர்
