ரயில் மறியல் போராட்ட வழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., - எம்.பி., விடுவிப்பு
ரயில் மறியல் போராட்ட வழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., - எம்.பி., விடுவிப்பு
ADDED : ஜன 10, 2025 07:42 AM
விழுப்புரம்,: கள்ளக்குறிச்சி அருகே நடந்த ரயில் மறியல் போராட்டம் தொடர்பான வழக்கில், தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மலையரசன் எம்.பி., ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி ரயில் நிலையம் அருகே ஈயனூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் தலைமையில், தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காரைக்காலிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயிலை மறித்து போராட்டம் செய்தனர். இதனால் அந்த ரயில், தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதுதொடர்பாக, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., உள்ளிட்ட 5 பேர் மீது, சின்னசேலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, இந்த வழக்கில், அரசு தரப்பில் போதிய சாட்சியம் இல்லாததால், வசந்தம் கார்த்திகேயன், மலையரசன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து, நேற்று உத்தரவிட்டார்.

